சென்னை,
நடிகர் விஷால் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருபவர். சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
விஷால் அரசியல்வாதியாக களம் புகுந்ததால் தேர்தல் களம் பரபரத்தது. ஆனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன்பிறகு சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார் விஷால். நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் விஷால் திடீரென மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கியுள்ளார். இப்போது விஷால் அதேபோன்ற ஒரு பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளார்.
விஷால் அமைப்பிற்கான விளம்பரத்தில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகங்கள் உள்ளன. விஷால் போட்டோ நடுவேயும், இருபக்கமும் அன்னை தெரசா மற்றும் அப்துல் கலாம் ஆகியோர் படங்களும் இடம் பெற்றுள்ளன.