‘தி பாரடைஸ்’ படத்தின் குத்துப்பாடலுக்காக ரூ.1.5 கோடி வரை கீர்த்தி சுரேசுக்கு சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ‘நடிகையர் திலகம்’ படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. விஜய் தேவரகொண்டாவுடன் ‘ரவுடி ஜனார்த்தனா’ திரைப்படத்திலும், அனில் ரவிபுடி இயக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீர்த்தி சுரேஷ் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
கீர்த்தி சுரேஷ், திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில்‘ரிவால்வர் ரீட்டா’ படம் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்தநிலையில் தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தி பாரடைஸ்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ஒப்பந்தமாகி இருக்கிறார். கீர்த்தி சுரேசின் இந்த புதிய முடிவு அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளது. இதற்கிடையில் இந்த குத்துப்பாடலுக்காக ரூ.1.5 கோடி வரை கீர்த்தி சுரேசுக்கு சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது, ‘கீர்த்தி சுரேஷ் குத்தாட்டம் போடுவது உண்மைதான். ஆனால் சம்பளம் குறித்தெல்லாம் இப்போது சொல்லமுடியாது’ என்று தெரிவித்தனர். ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திரைக்கு வர உள்ளது.
சமீப காலமாக முன்னணி நடிகைகள் திரைப்படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடுவது ஒரு புதிய டிரெண்டாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘பெத்தி’ திரைப்படத்தில் சுருதி ஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தமன்னாவின் ‘காவாலா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ‘புஷ்பா’ திரைப்படத்தில் சமந்தா ஆடிய சிறப்பு பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நாடு முழுவதும் பேசப்பட்டது.