சினிமா செய்திகள்

'பராசக்தி' பட ஊதிய பாக்கி விவகாரம்... சென்னை ஐகோர்ட்டை நாடிய சுதா கொங்கரா

இந்த வழக்கு தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக உருவான 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 1960-களில் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதுடன், ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரூ.8.39 கோடி ஊதிய பாக்கி

இந்த நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தை இயக்கியதற்கான ரூ.8.39 கோடி ஊதிய பாக்கியை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் இதுவரை வழங்கவில்லை என்று கூறி, அந்தத் தொகையை வழங்க உத்தரவிடக் கோரி இயக்குநர் சுதா கொங்கரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜூலை 8-க்குள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மேலும், தனது ஊதிய பாக்கி முழுமையாக வழங்கப்படும் வரை, டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'இதயம் முரளி' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் ஜூலை 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.