சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, தனது மனதில் உள்ள விஷயங்களை கொட்டி பேசினார். மிஷ்கின் பேசும் போது, "தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து சினிமாவில் சறுக்கியவர்களும் உண்டு. உதாரணம் என்னையே சொல்லலாம். தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்தேன். ஆனாலும் என் 'பிசாசு-2' படம் 6 வருடங்களாகியும் வெளிவராமல் இருக்கிறது. 'டிரெய்ன்' படம் 2 ஆண்டுகள் ஆகியும் வெளியிட முடியாமல் இருக்கிறது.
இதெல்லாம் எனக்கு என்ன சொல்லித்தருகிறது என்றால், சினிமா என்பது உயரமான, செங்குத்தாக ஏறவேண்டிய மலை. அதை எளிதாக கடந்து விடவே முடியாது. பெரிய பெரிய ஜாம்பவான்களையே இந்த சினிமா சில சமயம் சோதித்து பார்த்துவிடும். அதனால் தான் சினிமா உயர்வாகவும், ரசிக்கும்படியான இடத்திலும் இருக்கிறது.
பட விழா மேடையில் பேசி செத்துப்போக ஆசைப்படும் ஆள் நான். அதைவிட பெரிய ஆறுதலும், ஆசையும் எனக்கு இல்லை. ஏனெனில் சினிமாவை அந்தளவு காதலிக்கிறேன்”, என்று குறிப்பிட்டார்.