சினிமா செய்திகள்

சென்னை தி.நகரில் உள்ள இயக்குனர் அமீர் வீட்டில் ஐடி சோதனை

சென்னை தியாகராய நகரில் உள்ள அமீர் வீட்டில் வருமான வரித்துறை, பறக்கும் படை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை,

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. குறிப்பாக, எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ஜே.எஸ்.எம் விடுதி, அண்ணா சாலையில் உள்ள ஒரு விடுதி மற்றும் எத்திராஜ் கல்லூரிக்கு அருகிலுள்ள ஜே.எஸ்.எம் விடுதியின் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர, பட்டினப்பாக்கத்தில் உள்ள ஜாபர் சாதிக்கின் இல்லத்திலும் அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இயக்குனர் அமீர் வீட்டிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அமீர் வீட்டில் வருமான வரித் துறை, பறக்கும் படை சோதனை மேற்கொண்டுள்ளனர். ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடக்கும் நிலையில், இதன் தொடர்ச்சியாக இயக்குநர் அமீர் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.