தமிழ்நாடு முதல் அமைச்சராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றார். சினிமா துறையில் உச்சத்தில் இருந்த விஜய், அரசியல் கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் முதல் அமைச்சராகியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும் மத்திய மந்திரியுமான சுரேஷ் கோபியும் விஜய்யை பாராட்டி பேசியுள்ளார். மேலும், விஜய்க்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்து சுரேஷ் கோபி கூறியதாவது: முதல் அமைச்சர் விஜய் தற்போது தனது பணிகளை மேற்கொள்ளட்டும். செயல்பாட்டின் மூலம் தன்னை நிரூபிக்க அவருக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதற்கு முன்பே விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல. மக்கள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். அதனை சிறப்பாக பயன்படுத்தி நல்லாட்சி வழங்க வேண்டும்.
இடைத்தேர்தல் என்பது பதவி விலகல் அல்லது மரணம் போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது மக்களின் நேரத்தையும், பல மாதங்களையும் வீணடிக்கும் நிலையை உருவாக்கும். ரஜினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை நாம் கணிக்க முடியாது. அவர் அரசியலுக்கு வர விரும்பினால் வரலாம். எந்த அரசியலாக இருந்தாலும் பரவாயில்லை. அனைவரும் அரசியலுக்கு வந்து உலகுக்கும் தமிழ் மக்களுக்கும் பயனுள்ளதாக செயல்பட வேண்டும். குறிப்பாக ரஜினி சார் தமிழ் மக்களுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.