சென்னை,
விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த ஜூலை 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “தமிழக சட்டமன்றம் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறுகின்றனர். அங்கேயும் ‘கட்டா குஸ்தி’தான் நடக்கிறது. ஆனால் அது ஒரு ஆரோக்கியமான சண்டை. மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்கள் என்பதைப் பற்றிய ஆரோக்கியமான போட்டி. கூட்டம் முடிந்த பிறகு கைகுலுக்கிவிட்டு மக்கள் பணியில் நாங்கள் கவனம் செலுத்த தொடங்கிவிடுவோம்.
சினிமாவுக்கு இப்போது இன்னொரு போட்டி வந்துவிட்டது. மக்கள் தினமும் காலை 9.30 மணிக்கு ‘மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே...’ என்ற குரலை கேட்பதற்காக சட்டசபை நேரலையை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்பொழுது இருக்கும் அளவிற்கு முன்பெல்லாம் நேரலை வசதிகள் கிடையாது. இப்போது மக்கள் அனைத்தையும் பார்க்கிறார்கள் என்பதால் பொறுப்புணர்ச்சி கூடியிருக்கிறது” என்று தெரிவித்தார்.