சென்னை,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்ற இவர், சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக 'தேவரா' படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார்.
இப்படத்தைத்தொடர்ந்து, ராம் சரணுக்கு ஜோடியாக ஆர்.சி.16 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வரும்நிலையில், ஜான்வி கபூரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இயக்குனர் துஷார் ஜலோட்டா 'பரம் சுந்தரி' எனப்பெயரிடப்பட்டுள்ள பாலிவுட் படத்தை இயக்குகிறார்.
தினேஷ் விஜனின் மோடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானியின் கணவரும் நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ரா 'பரம்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், 'சுந்தரி'யாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவரா திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்த ஜான்வி கபூர் தற்பொழுது மீண்டும் தென்னிந்திய பெண்ணாக நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
View this post on Instagram