2022ஆம் ஆண்டு வெளிணுயான பிளாக்பஸ்டர் திரைப்படமான காந்தாரா-வின் மூலம், திரைக்கதை எழுதி, இயக்கி, முக்கிய வேடத்தில் நடித்து, இந்திய அளவில் பிரபலமானார், நடிகர் ரிஷப் ஷெட்டி. இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 'காந்தாரா: அத்தியாயம் 1 என்ற படத்தையும் வெளியிட்டார். மேலும், 'ஜெய் ஹனுமான்' என்ற பான் இந்தியா படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 'காந்தாரா' புகழ் நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரையும் அன் பாலோ செய்துள்ளார். 140 பேரைப் பின்தொடர்ந்து (பாலோ) வந்த அவர், தற்போது தனது மனைவி பிரகதி, சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை ஆகிய மூன்றை மட்டுமே பின்தொடர்கிறார். காந்தாரா பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களையும் அவர் தவிர்த்துள்ளது கன்னடத் திரையுலகில் பெரும் விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.