சினிமா செய்திகள்

பிரகாஷ் ராஜ்க்கு எதிராக காவல் நிலையத்தில் கராத்தே கல்யாணி புகார்

பிரபல நடிகையான கராத்தே கல்யாணி, பிரகாஷ் ராஜ்க்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கடவுள் ராமர் மற்றும் லட்சுமணரை "வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்குள் நுழைந்த புலம்பெயர்ந்தவர்கள் என்று பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமாயணம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகையான கராத்தே கல்யாணி, பிரகாஷ் ராஜ்க்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். பிரகாஷ் ராஜின் கருத்துகள் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதால், அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக தனது பேச்சு தொடர்பாக பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் ஒன்றை அளித்து இருந்தார். அதில், "கடவுளை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சியில் தான் உரையாற்றினேன். அரசியல் லாபத்திற்காக எனது பேச்சு திட்டமிட்டு திரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.