சென்னை,
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக வெளியான 'பராசக்தி', பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 1960-களில் தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதோடு, ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், 'பராசக்தி' திரைப்படத்தை இயக்கியதற்கான ரூ.8.39 கோடி ஊதிய பாக்கியை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் இதுவரை வழங்கவில்லை என சுதா கொங்கரா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். நிலுவையில் உள்ள தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், தனது சம்பள பாக்கி முழுமையாக வழங்கப்படும் வரை டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'இதயம் முரளி' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் சுதா கொங்கரா கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பள பாக்கி தொடர்பான பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக் கொள்ள சுதா கொங்கராவுக்கு அறிவுறுத்தினார். மேலும், 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த ஐகோர்ட்டு, அதுதொடர்பான கோரிக்கையை தள்ளுபடி செய்தது.