சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கவுதமி, கடந்த சில ஆண்டுகளாக அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். முதலில் பா.ஜ.க.வில் இணைந்த அவர், பின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அக்கட்சியில் அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்த கவுதமி, அதன் பின்னர் வேறு எந்த அரசியல் கட்சியிலும் இணையவில்லை.
கவுதமிக்கு சொந்தமான நிலங்களை மோசடியாக அபகரித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் அழகப்பன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தனிப்பட்ட முறையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து நடிகை கவுதமி நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள், கவுதமியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விசாரணையின் போது என்னென்ன கேள்விகள் எழுப்பப்பட்டன அல்லது எந்த விவரங்கள் குறித்து விளக்கம் பெறப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. பின்னர், கவுதமி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை முடித்து வெளியேறிய பிறகே இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.