‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் சிவாஜி கணேசனுடனான சுவாரசிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
இப்படத்தின் கதாநாயகனாக சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கங்கை அமரன், நடிகை ரோஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் தர்ஷன் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சத்யஜோதி நிறுவனம் – இளையராஜா கூட்டணி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’, ‘பகல் நிலவு’, ‘காதல் பரிசு’, ‘கிழக்கு வாசல்’, ‘பணக்காரன்’, ‘இதயம்’, ‘ஆனஸ்ட் ராஜ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. தற்போது ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளது.
‘உன்னை நம்பி’ எனத்தொடங்கும் பர்ஸ்ட் சிங்கிளை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். ‘சர்க்காரே சொல்லிருச்சு’ எனத்தொடங்கும் இரண்டாவது பாடலை எஸ். பி. சரண், முகேஷ் முகமது இணைந்து பாடியிருந்தனர். இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘பாண்டிமுனி கேக்குது’ வெளியாகியுள்ளது. இப்பாடலை இளையராஜா எழுதி பாடியுள்ளார்
‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியான பதிவை கூறியிருந்தார்.
“நான் எப்பொழுதும் காலை 7 மணிக்கு என்னுடைய ஸ்டுடியோ அறையில் இருப்பேன். ஆனால், ஒரு நாள் எதிர்பாராதவிதமாக 5 நிமிடங்கள் தாமதமாக, அதாவது 7.05 மணிக்குச் சென்றேன். அப்போது, சிவாஜி அண்ணன் பக்கத்து அறையில் டப்பிங் பணிக்காக வந்திருந்தார். அவர் எப்பொழுதுமே என்னை 'ராஜா' என்று கூப்பிட மாட்டார். மிகவும் அன்போடு 'ராசா' என்றுதான் கூப்பிடுவார்.
அன்று நான் தாமதமாக வந்ததைப் பார்த்த அவர், 'ராசா நீயுமா லேட்டு?' என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு நான் அவரிடம், 'அண்ணே, நான் 7 மணிக்கு வருபவன், 5 நிமிடம் தாமதமாகிவிட்டது. ஆனால் நீங்கள் 25 வருடங்களுக்கு முன்னதாகவே திரைத்துறைக்கு வந்துவிட்டு, இப்போது என்னை லேட் என்று சொல்கிறீர்களா?' என்று பதிலளித்தேன்,” என சிவாஜி கணேசனுடனான தனது பழைய நினைவை மேடையில் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து பேசிய இளையராஜா, இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசனை மனதாரப் பாராட்டினார். “தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரைத் திரையுலகில் காப்பாற்றும் அளவிற்கு அவருடைய நடிப்பு அமைந்துள்ளது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று கூறினார்.
மேலும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தனது தம்பி கங்கை அமரன் குறித்தும் இளையராஜா கலகலப்பாகப் பேசினார். “என் தம்பி கங்கை அமரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் நிஜ வாழ்க்கையில் என்னிடமே எப்போதும் நடித்துக் கொண்டிருப்பார். அவர் இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்திருக்கிறார்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.