சினிமா செய்திகள்

ஒரு முறை இல்லை, பலமுறை வருவதுதான் காதல் - நடிகை தமன்னா

இன்றைய காலகட்டத்தில் காதல் ஒரு வியாபாரமாக மாறும் அபாயம் உள்ளது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது, பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை தமன்னா, திரையுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது கிரேஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது ‘புருஷன்’ படத்தில் நடித்துவருகிறார்.

நடிகை தமன்னா கடந்த பல வருடங்களுக்கு மேல் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த சில பாடல்களுக்கு கிளாமராக நடனமாடி கிரங்கடித்து வருகிறார்.

சமீபத்தில் தமன்னா அளித்த பேட்டியில் காதல் குறித்து கூறுகையில், “ஒரு முறை மட்டும் இல்லை. பல முறை வருவது தான் காதல். இன்றைய காலகட்டத்தில் காதல் என்றால் என்ன, உறவு என்றால் என்ன என்பதில் பலர் குழப்பமடைகிறார்கள். காதல் ஒரு வியாபாரமாக மாறும் அபாயம் உள்ளது. ஒருவரை உண்மையாக நேசிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். நம் எண்ணங்களை திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது. காதல் என்பது ஒரே ஒரு அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. அது வாழ்க்கையில் பலமுறை நிகழக்கூடிய உணர்வு. அந்த உணர்ச்சி வெளிப்புற காரணிகளால் இல்லை, நமக்குள் உருவாகிறது” என தமன்னா தெரிவித்துள்ளார்.