சினிமா செய்திகள்

மாதம்பட்டி ரங்கராஜ் எனது குழந்தையை மகனாக ஏற்றுக்கொண்டுள்ளார் - ஜாய் கிரிசில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழந்தையை வாழ்நாள் முழுவதும் பார்த்து கொள்வதாக தெரிவித்ததாக ஜாய் கிரிசில்டா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்திருந்தது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள், மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி முன், சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக, வழக்கறிஞர் தெரிவித்தார். ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா, தன்னுடைய சமூக வலைதளத்தில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் குறித்து பலர் கேட்கிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜ், ரகா ரங்கராஜை தனது மகனாக ஏற்றுக்கொண்டுள்ளார். வாழ்நாள் முழுவதும் அவருடன் இருப்பேன் என்றும், தனது மகனை ஒருபோதும் விட்டு செல்லமாட்டேன் என்றும் கூறியுள்ளார். இனி என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.