சென்னை,
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ‘இரும்புத்திரை’ படத்தில் விஷால் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் நடிகர் மாதவனை அணுகியதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை கையில் எடுத்து படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இவர் இயக்கிய ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’, ‘சர்தார்’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ‘சர்தார் 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இரும்புத்திரை’. டிஜிட்டல் மோசடிகள், தனிநபர் தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்ற ‘இரும்புத்திரை’, இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ‘இரும்புத்திரை’ படத்தில் விஷால் நடித்த கதாபாத்திரத்திற்கு முதலில் நடிகர் மாதவனை அணுகியதாக தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் கதையை முதலில் மாதவனிடம் கூறியதாகவும், கதையின் முதல் பாதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் மித்ரன் கூறியுள்ளார். ஆனால், இரண்டாம் பாதை மாதவனுக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. இதனால், மாதவன் இப்படத்தில் நடிப்பதைத் தவிர்த்ததாகவும், அதன்பிறகு ‘இரும்புத்திரை’ படத்தின் கதையை நடிகர் விஷாலிடம் கூறியதாகவும் மித்ரன் தெரிவித்துள்ளார்.
கதையை கேட்ட விஷால், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார். இதையடுத்து உருவான ‘இரும்புத்திரை’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.