தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குநர் ராஜமவுலி புதிய போஸ்டரை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
'பாகுபலி', 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு ‘வாரணாசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சர்வதேசத் தரத்தில் ஆக்ஷன் அட்வென்ச்சர் பாணியில் இப்படம் உருவாகி வருக்கிறது. ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில், பின்னணியில் ஒட்டகச்சிவிங்கிகள் நிற்க, மகேஷ் பாபு மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். காடுகளுக்குள் சாகசப் பயணம் மேற்கொள்ளும் ஒரு ஆராய்ச்சியாளராக அவர் இப்படத்தில் வலம் வரவுள்ளார் என்பதையும் இந்தத் தோற்றம் உறுதிப்படுத்துகிறது.
சுமார் ரூ.1,400 கோடி பிரம்மாண்ட செலவில் உருவாகும் இப்படம், இந்திய திரையுலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமாகும். கி.பி. 512 முதல் தற்காலம் வரை, திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் ஆன்மீக சாகசப் படமாக இது உருவாகிறது.
அண்டவெளியில் இருந்து பூமிக்கு வரும் விண்கல் ஆபத்தும், வாரணாசி படித்துறைகளின் ரகசியங்களும் இதன் மையக்கதை எனத் தெரிகிறது. ஐதராபாத், ஒடிசா, கென்யாவின் ஆப்பிரிக்க காடுகள் மற்றும் அண்டார்டிகாவின் உறைபனிப் பகுதிகள் என உலகம் முழுவதும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து முன்னணி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர்.
முழுக்க முழுக்க ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் 3D வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ருத்ரா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை இயக்குநர் ராஜமவுலி தனது எக்ஸ தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மூங்கில் படகில் மகேஷ் பாபு சாய்ந்திருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு நீண்ட தலைமுடி மற்றும் அடர்ந்த தாடியுடன் முற்றிலும் மாறுபட்ட முரட்டுத் தோற்றத்தில் காட்சியளிக்கும் மகேஷ் பாபு, இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.