கொச்சி
மலையாள திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் சந்தோஷ் கே.நாயர். ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடித்த அவர், பின்னர் வில்லன், நகைச்சுவை நடிகர் என பல வேடங்களில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றவர்.
இந்த நிலையில், அவர் நேற்று தனது மனைவியுடன் கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஈனாத்து பகுதிக்கு அருகே சென்றபோது, அவர்கள் சென்ற கார் மீது வேன் ஒன்று மோதியது.
இந்த விபத்தில் சிக்கி சந்தோஷ் கே.நாயர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது மலையாள திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சந்தோஷ் கே.நாயரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய மறைவுக்கு நடிகர் மம்முட்டி பேஸ்புக்கில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றிய தருணங்களை அன்புடன் நினைவு கூர்ந்து பார்க்கிறேன். இந்த கடினமான நேரத்தில், அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் என்னுடைய நினைவுகள் உள்ளன என்று தெரிவித்து உள்ளார். இதேபோன்று, இரக்க மனம் கொண்ட நல்ல மனிதர் என நடிகர் மோகன்லாலும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.