சினிமா செய்திகள்

மலையாள நடிகை பாலியல் புகார்: இயக்குனர் ரஞ்சித் கைது - சிறையில் அடைப்பு

அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொச்சி,

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் ரஞ்சித். ஷூட்டிங்கின் போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நடிகை ஒருவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து நேற்று இரவு ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். உடனடியாக கொச்சியில் மாஜிஸ்திரேட்டு முன்பாக ரஞ்சித் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இயக்குனர் ரஞ்சித் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:

திரைப்பட படப்பிடிப்பின்போது இயக்குனர் தன்னை கேரவனுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக நடிகை குற்றம் சாட்டினார். இந்த புகாரின் அடிப்படையில், ரஞ்சித் மீது கொச்சி நகர போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த நடிகையின் வாக்குமூலம் திங்கட்கிழமை மகளிர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ரஞ்சித்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றனர்.

ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையிலும் ரஞ்சித் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன. கடந்த 2024 ஆம் ஆண்டு, பெங்காலி நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.