சென்னை,
சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி சீரியல் நடிகையிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து, பின்னர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 38 வயதான சீரியல் நடிகை, கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த நடிகைக்கு ஷேக் முத்தலிக் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நடிகையிடம் ஷேக் முத்தலிக், தனக்கு சினிமாவில் பல பேருடன் பழக்கம் இருப்பதாகவும், சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பி சீரியல் நடிகை ஷேக் முத்தலிப்புடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், செங்கல்பட்டில் ஒரு விருது விழா நடந்துள்ளது. அந்த விழாவிற்கு நடிகையை வரச்சொல்லி ஷேக் முத்தலிக் அழைத்துள்ளார். இதன்படி நடிகை அங்கு சென்றபோது, திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசியிருப்பதாகவும், விரைவில் சினிமா வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும் கூறி நடிகையை அழைத்து சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் நடிகையுடன் உல்லாசமாக இருந்ததை ஷேக் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார். இதன் பின்னர் அந்த நடிகை ஷேக்கிடம் சினிமா வாய்ப்பு குறித்து கேட்டபோது, தன்னிடம் இருந்த வீடியோவை காட்டி நடிகையை மிரட்டிய ஷேக் முத்தலிக், வீடியோவை கசியவிடாமல் இருக்க வேண்டும் என்றால் தனக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இதனால் அந்த நடிகை சுமார் 2 லட்சம் ரூபாய் பணம், 11 சவரன் நகை ஆகியவற்றை ஷேக்கிடம் கொடுத்துள்ளார். ஆனால் இதற்குப் பிறகும் தொடர்ந்து அந்த நடிகையை ஷேக் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த மிரட்டல் வேலைக்கு ஷேக்கின் நண்பர் சுரேஷ் கண்ணா என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த நடிகை, தனது நடந்த விஷயங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஷேக் முத்தலிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சுரேஷ் கண்ணா தலைமறைவான நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.