‘மண்டாடி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி தனது சர்ச்சையான பேச்சுக்கு தனது எக்ஸ் பக்கத்தில்விளக்கம் அளித்திருக்கிறார்.
மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
சூரி நாயகனாக நடித்த ‘மண்டாடி’ திரைப்படம் 8 நாட்களில் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘மண்டாடி’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் மதிமாறன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது சுஹாஸ் குறித்து பேசுகையில், “ஷூட்டிங் ஸ்பாட்டில் சுஹாஸ் என்னிடம் ரொம்ப பீல் பண்ணி பேசினார். கருப்பா இருக்கிறதாவும் அதனால வந்த ரேசிஸ்ட் கமெண்ட் தொடர்பாவும் சொன்னார். அதற்கு கண்டிப்பா இந்த படம் ஜெயிக்கும், அப்புறம் மேடையில் உங்களுக்கு நான் பதில் சொல்லுகிறேன் என்றேன்.
அதனால் இப்போது சொல்கிறேன் சுஹாஸிடம் கருப்பா இருந்தா மேல வர முடியாதுன்னு சொன்னவருக்கு... கருப்பு பத்தி தமிழ்நாட்டுல பேசாதீங்க. அதெல்லாம் இங்க இல்ல. நீங்க இந்த படம் பார்த்துட்டு திருப்பி கூப்பிடலன்னா நாங்களே சுஹாஸை இங்க உட்கார வச்சிப்போம். அவரை இங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டிலையும் இந்த படம் மூலமா தெரியும். எங்களுக்கு அவர் நடிச்ச சாட்டை புலி கேரக்டர் ஒரு எமோஷன். இங்கு உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்றார்.
இது மறைமுகமாக தெலுங்கு மக்களை அவர்கள் இனவெறி ரீதியாக செயல்படுவதாகப் புரிந்துகொள்ளப்பட்டது. சமூக வலைதளத்தில் தெலுங்கு மக்கள் இயக்குநருக்கு எதிராக பேசத் தொடங்கியுள்ளார்கள்.
‘மண்டாடி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி தனது சர்ச்சையான பேச்சுக்கு தனது எக்ஸ் பக்கத்தில்விளக்கம் அளித்திருக்கிறார். அதில் “நேற்று ‘மண்டாடி’ வெற்றி விழாவில் நான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன். நடிகர் சுஹாஸை நிறத்தை வைத்து கேலி செய்த இயக்குநர் ஒருவரைப் பற்றி மட்டுமே நான் பேசினேன். எனது வார்த்தைகள் தெலுங்கு மக்களையோ அல்லது அந்த ரசிகர்களையோ அல்லது தெலுங்கு சினிமாவை குறித்தோ நினைத்து கூறப்பட்டவை அல்ல.
சொல்லப்போனால், ஐதராபாத் நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே தெலுங்கு சினிமாதான் முன்னணியில் இருக்கிறது எனக் கூறியுள்ளேன். தெலுங்கு சினிமா மற்றும் அந்த ரசிகர்கள் மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது.மண்டாடி படத்திற்கும் எனக்கும் அவ்வளவு அன்பைக் கொடுத்த தெலுங்கு மக்கள் மீது வேண்டும் என்றே குறைசொல்ல எனக்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை.
எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டால் அதற்காக வருந்துகிறேன். தெலுங்கு மக்கள், தெலுங்கு சினிமா மீதான எனது நேசம் எப்போதும் மாறாதது. ஒருவர் அவரைப் பற்றி தவறாகப் பேசியதால், சுஹாஸுக்கு ஆதரவளிக்கவே அப்படி பேசினேன் தவிர அனைத்து தெலுங்கு மக்களையும் அப்படி பேசவில்லை” என கூறியுள்ளார்.