சினிமா செய்திகள்

மணிரத்னம் -விஜய் சேதுபதி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

மணிரத்னம் இயக்கத்தில், தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்கும் புதிய காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது கொல்கத்தாவில் தொடங்கியுள்ளார்.

மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

சமீபத்தில், இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. ஆனால், அந்த தகவல் உண்மையல்ல என்றும், மணிரத்னத்தின் நீண்டநாள் கூட்டணியான ஏ.ஆர். ரகுமானே இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், படத்திற்கான ஒரு பாடலை ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான் உருவாக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் இணையும் மணிரத்னம் - ஏ.ஆர். ரகுமான் கூட்டணி

1992-ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படம் முதல் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இணைந்து பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ளனர். இந்த புதிய படத்திலும் அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. முன்னதாக, 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவருடன் இணைகிறார்.

ஓடிடி உரிமை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்?

அழுத்தமான காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 40 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்கள் அந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு

மணிரத்னம், தனது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பைக் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளார். படத்தின் மிக முக்கியமான காட்சிகள் கொல்கத்தாவின் அடையாளமான ஹவுரா பாலத்தில் நள்ளிரவு நேரங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மணிரத்னம் காட்சிகளை விளக்குவதும், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் காட்சிகள் அடங்கிய பிரத்யேகப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. இதில், நடிகர் விஜய் சேதுபதி மீசை, தாடி இல்லாத தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய கூட்டணியின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது