சென்னை,
படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது.
‘ரோஜா’ திரைப்படம் முதல் மணிரத்னம் – ஏ.ஆர். ரகுமான் கூட்டணி பல வெற்றிப் பாடல்களையும், திரைப்படங்களையும் வழங்கியுள்ளது. அந்த வகையில், இந்த புதிய படத்திலும் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். மேலும், ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி, மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றது. அங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கொல்கத்தாவின் பிரபலமான ஹவுரா பாலத்திலும் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மணிரத்னம் காட்சிகளை இயக்கும் புகைப்படங்களும், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
கொல்கத்தா மற்றும் புதுச்சேரியைத் தொடர்ந்து தற்போது சென்னையில் கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி மீசை, தாடி இல்லாத வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவரது புதிய தோற்றம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி – சாய் பல்லவி கூட்டணியுடன் மணிரத்னம் – ஏ.ஆர். ரகுமான் இணைந்திருப்பதால், இந்த படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.