நீலம் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் ‘பீட்சா 2’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். காலா, ஜெய் பீம், குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. ‘குட் நைட்’ படத்திற்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் ‘கோட்’ படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட விஜயகாந்திற்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இவர் நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் வெளியாகி வெற்றிப்படமானது.
இவர் நடிக்கும் அல்லது வசனம் எழுதும் அனைத்து படங்களும் மக்களிடம் பெரிதும் கவனம் பெற்றவையாகத்தான் இருக்கின்றன. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் எளிய மக்களின் யதார்த்த வாழ்வினை, வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும் படமாகத் தான் இருக்கின்றன. எனவே தான், இவரது படங்கள் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் பெற்றுள்ளன. அதனாலேயே, இவரது படங்கள் மீது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
திரைக்கதை எழுதுவதிலும் ஆர்வம்கொண்ட மணிகண்டன் ‘விக்ரம் வேதா’ படத்தில் வசனம் எழுதி கவனம் ஈர்த்தார்.‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தினையும் இயக்கியுள்ளார். ‘குடும்பஸ்தன்’ வெற்றிக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பார் என்ற தேடுதல் நீண்ட நாள்களாக சென்றுகொண்டிருந்தன. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மற்ற நடிகர், நடிகைகள் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், “பின்வாங்காத சாதாரண மனிதனே மிகப்பெரிய கதாநாயகன்” எனக் கூறியுள்ளார். இப்படத்தினை ப.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.