சினிமா செய்திகள்

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் : தமிழக அரசை பாராட்டிய கமல்ஹாசன்

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் நேற்று அறிவித்திருந்தார்.

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம அமைக்க உள்ளதாக அறிவித்த தமிழக அரசை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் உடல் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சாதனைகளை போற்றும் வகையில் ரூ.2.50 கோடியில் தேனியில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் நேற்று அறிவித்திருந்தார்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி” என கூறியுள்ளார்.