சென்னை,
இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்து தனது சமுக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாரதிராஜா. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10-ம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பாரதிராஜாவின் திரையுலக சாதனைகளை போற்றும் வகையில், அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தேனியில் ரூ.2.50 கோடி செலவில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்து தனது சமுக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்டும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாட்டு அரசுக்கும், முதல்-அமைச்சர் விஜய்க்கும் கோரிக்கையை முதலில் முன்வைத்தவன் என்ற முறையில் என் முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அல்லிநகரத்தின் கலாசாரத்துக்கு டெல்லி நகரத்து அங்கீகாரம் பெற்றுத்தந்த பெருங்கலைஞர் பாரதிராஜா. அடித்தட்டு மக்களின் கனவுகளை, நம்பிக்கைகளை, வாழ்வியலை, விழுமியங்களை காட்சிப்படுத்திய கலைப் பெருமகன். அவருக்கான மணிமண்டபத்தை அவர் பிறந்த தேனி மாவட்டத்திலேயே அமைப்பது என்பது அவருக்கு அரசு வழங்கும் கடைசி மரியாதையாகும். தமிழ்நாட்டு அரசுக்கு என் முதல் மரியாதை. மீண்டும் நன்றி.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.