சென்னை,
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் விஜய்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் 10-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரது உடல் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியில் திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் நினைவைப் போற்றும் வகையில், அவர் பிறந்த மண்ணில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் அவர் தலைமையில் இயங்கும் தமிழக அரசுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளது.