நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். இந்தப் போராட்டத்தில் ஏன் இறங்கினீர்கள்? இது தேவையில்லாத விஷயம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார் என பாடகர் தெருக்குரல் அறிவு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர்.
நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வடமாநிலத்தில் ஆலியா பட், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தென்னிந்திய திரையுலகம் சென்னை மண்ணில் நேரடியாக வீதியில் இறங்கி போராடத் துணிந்துள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாடகர் தெருக்குரல் அறிவு, "முன்பு ஜாதியால் கல்வி மறுக்கப்பட்டது. இப்போது நுழைவுத்தேர்வுகளால் கல்வி மறுக்கப்படுகிறது. ஆசிரியர்களே வேலைக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு எப்படி நல்ல கல்வி கிடைக்கும். கல்வியில் மிகப்பெரிய சீர்திருத்தம் தேவை. நீட் தேர்வு மட்டுமல்லாமல் புதிய கல்விக் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டும். ஆணி பொருத்திய லத்தியைக் கொண்டு மாணவர்களை அடிக்கிறார்கள். போராடும் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்கிக் கொண்டிருக்கிறது. அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அனிதாவின் அண்ணனாகவே நான் தலைமைச் செயலகம் முன்பு போராடினேன். நான் தலைமைச் செயலகம் முன்பு சென்று போராடியபோது என்னை உள்ளே அழைத்துப் பேசினார்கள். நான் முதல்-அமைச்சர் விஜய்யை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைதான் சந்தித்தேன். "நீட் தேர்வை ரத்து செய்வது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் தான் முடியும். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இந்த போராட்டத்தில் இறங்கினீர்கள்" என எனக்கு அட்வைஸ் செய்து அனுப்பினார்" எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகம் முன்பு நீட் தேர்வுக்கு எதிப்பு தெரிவித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தெருக்குரல் அறிவுடன் நீண்ட நேரம் பேசி அவரை வழியனுப்பி வைத்தார். அப்போது வெளியே வந்த தெருக்குரல் அறிவிடம், முதலமைச்சரை சந்தித்தீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவின் பாப் மேர்லி என அழைக்கப்படும் ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு, இடஒதுக்கீடு குறித்தும், சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் பாடல்கள் மூலம் மிக அழுத்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வாரந்தோறும் வடசென்னையில் ஒவ்வொரு தெருவில் அங்குள்ள ராப் பாடகர்களை 'தெருக்குரல்' ஆல்பம் மூலம் ஒன்றிணைத்து பாடல்களை பாடி வரும் அறிவு, துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சாதி அடிப்படையில் மக்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் எனப் பல பிரச்சினைகளைப் பற்றிய பாடல்களைப் பாட வைத்து வருகிறார். ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான காலா திரைப்படத்தில் வரும் உரிமை மீட்போம் என்ற பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அறிவு.