சென்னை,
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகையும், முன்னாள் பெமினா மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்றவருமான மானசா வாரணாசி, தனது அழகும் திறமையும் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஐதராபாத்தைச் சேர்ந்த அவர், தெலுங்கில் வெளியான 'கப்புள் பிரண்ட்லி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தெலுங்கில் கவனம் பெற்றுள்ள மானசா வாரணாசியை தமிழ் திரையுலகிலும் அறிமுகப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அவரிடம் இரண்டு புதிய தமிழ் படங்களின் கதைகள் சொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ஒரு கதைக்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமா குறித்த தனது எதிர்பார்ப்புகளை பகிர்ந்த மானசா வாரணாசி, "நடிகையாக எனக்குள்ள மிகப்பெரிய ஆசை ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடிப்பதுதான். ரசிகர்களின் அங்கீகாரத்தை பெறுவது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக தொடர்ந்து உழைத்து, போராட தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.