மும்பை,
பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் ரோகித் ஷெட்டி வசிக்கும் மும்பை ஜூகு பகுதியில் உள்ள 9 மாடி குடியிருப்பின் மீது கடந்த 1-ந்தேதி நள்ளிரவு 12.45 மணியளவில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு தோட்டா அங்கிருந்த உடற்பயிற்சி கூடத்தின் கண்ணாடி மீது பாய்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் ஆதித்ய காயகி(19), சித்தார்த் யென்புரே(20) சமர்த் போமாஜி (18), ஸ்வப்னில் சகத்(23) மற் றும் ஆசாராம் பசலே ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களில் சிலர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால், இவர்களுக்கு எதிராக மோக்கா சட்டம் பாய்ந்துள்ளது. இந்தநிலையில் கைதானவர்களின் காவல் முடிந்ததை அடுத்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, போலீசார் அவர்களை போலீஸ் காவலில் ஒப்படைக்க வலியுறுத்தினர். அவர்கள் கூறுகையில், இந்த துப்பாக்கி சூடு மும்பை நகரம் முழுவதையும் அச்சுறுத்தி ஒருவித பயங்கரவாதத்தை உருவாக்கவே நடத்தப்பட்டது. இந்த வழக்கில் கைதானவர்களுக்கு தேவையான துப்பாக்கிகளை, பாபா சித்திக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பிரவீன் லோங்கர் தான் வழங்கியுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சுபம் லோன்கர் மற்றும் சிறையில் உள்ள பிரவீன் லோன்கர் ஆகியோருடன் கைதானவர்களுக்கு உள்ள தொடர்பை நிரூபிக்க கூடுதல் விசாரணை தேவை என வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு 5 பேரின் போலீஸ் காவலை 17-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.