பெண் படைப்பாளர்களின் தேவை அதிகமாக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து 'மாறன்', 'தங்கலான்' , ஹிருதயப்பூர்வம் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தற்போது ‘சர்தார் 2’, ‘பாக்கெட் நாவல்’ ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து மாளவிகா மோகனன் சிறப்பு தோற்றத்தில் (கேமியோ) நடித்திருந்தார். அவரது இந்த தோற்றம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் குறித்து மாளவிகா மோகனன் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்தியாவில் பெண் எழுத்தாளர்கள், இயக்குநர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. நமக்கு அதிகமான பெண் படைப்பாளர்கள் தேவை. பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அவர்களில் சிலர் அருமையான சண்டைக்காட்சி பாத்திரங்களையும் எழுதுவார்கள். அப்போது நாமும் ஹாலிவுட்டின் “கில் பில்”' போன்ற ஒரு இந்திய ஆக்சன் படத்தைக் கொடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.