தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து குறித்து இணையத்தில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் நாக சைதன்யா நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங் முன்னிலையில் கடந்த மே 29 அன்று விசாரணைக்கு வந்தது.
நாக சைதன்யா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “இணையத்தில் வெளியாகும் சில பதிவுகள், நாக சைதன்யா சமந்தாவை ஏமாற்றியதாகவும், அவரது திரையுலக வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் தவறாகச் சித்தரிக்கின்றன. இது வெறும் தனி நபர் மீதான டிரோலிங் தானே தவிர, நியாயமான விமர்சனம் கிடையாது. நடிகரின் அனுமதியின்றி அவரது தோற்றத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்கள் மற்றும் அநாகரீகமான உள்ளடக்கங்கள் அனுமதியற்ற வணிகப் பொருட்கள் மற்றும் இணையத்தில் உலா வரும் ஆபாசப் பொருட்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் நாக சைதன்யாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்படுகிறது. நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குகிறார். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தெலுங்கு பேசும் மக்களிடையே அவருக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. எனவே, நாக சைதன்யாவுக்கும், அவரின் அடையாளத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி “பொது வாழ்க்கையில் இருக்கும் பிரபலங்கள் சாதாரண குடிமக்களை விட கூடுதல் பொது கண்காணிப்புக்கு உள்ளாவது இயல்புதான் என்றாலும், அதற்கும் சில எல்லைகள் உள்ளன. நாக சைதன்யாவின் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குச் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.