மும்பை,
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில், நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் ஆகியோரின் வங்கி கணக்குகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு முடக்கி இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் சார்பில் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "வங்கி கணக்குகளை முடக்கும்போது சட்டப்படி முறையான நடைமுறைகளை அதிகாரிகள் பின்பற்றவில்லை” என்று வாதிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி யு.சி.தேஷ்முக் தனது உத்தரவில் கூறியதாவது:- போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவரது சொத்து அல்லது வங்கி கணக்கை முடக்கும்போது, 30 நாட்களுக்குள் அதற்கு உரிய அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த வழக்கில் அத்தகைய அனுமதி பெறப்படவில்லை என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, இந்த முடக்கம் சட்டப்படி செல்லாது.
எனவே நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரின் வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கி விதிகளின்படி அவர்கள் தங்கள் கணக்குகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.