நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு டாக்ஸிக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார். இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்திலிருந்து, கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. நயன்தராவின் பர்ஸ்ட் லுக் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ், ஜான் விக் உள்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறும்போது, நயன்தாராவை சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைப்பட முன்னணி ஆளுமையாகவும் அறிவோம். ஆனால் டாக்ஸிக் படத்தில், இதுவரை நாம் காணாத பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி அனைத்தும் அந்த கதாபாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில் தான் எனக்கு உண்மையான கங்கா கிடைத்தார். அதைவிட அழகானது, அந்தப் பயணத்தில் நெருங்கிய நண்பரையும் பெற்றேன் என தெரிவித்துள்ளார்.