திரையுலகில் சிறுவயது முதலே நுழைந்து, பல ஏற்றத் தாழ்வுகளை கடந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. நேற்று அவர் தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எனக்குக் கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துகளாலும், நீங்கள் காட்டிய அன்பினாலும் நான் நெகிழ்ந்து போனேன். திரையுலகைச் சேர்ந்தவர்கள், ஊடக நண்பர்கள், மற்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அன்புடன் வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
என் ரசிகர்களே, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவுமே என் உந்துசக்தி. உங்கள் பாசமும் ஊக்கமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. நீங்கள் இல்லாமல் நான் இல்லை!” என்று பதிவிட்டுள்ளார்.