சென்னை,
தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘கர’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘தமிழ் முருகன்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் என அடுத்தடுத்து பல படங்களில் தனுஷ் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில், ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘உறியடி’ படத்தின் மூலம் பிரபலமான விஜயகுமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தற்போது தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வரும் செப்டம்பர் மாத இறுதியில் படத்தின் பூஜை நடைபெற உள்ளதாகவும், தொடர்ந்து அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.