சென்னை,
தமிழக முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளில் வெளியாகும் முன்பே ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சைபர் கிரைம் போலீசார் இதுவரை 11-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இருப்பினும், இதுபோன்ற கசிவுகள் திரையரங்கு வசூலை பெரிதாக பாதிக்காது என்றும், ரசிகர்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தே ரசிக்க விரும்புவார்கள் என்றும் திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வருகிற ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுமார் 183 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம், பிரம்மாண்டமான வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.
‘ஜனநாயகன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் தொடங்கிய நிலையில், உலகம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் நாள் காட்சிகள் பல இடங்களில் ஹவுஸ்புல் ஆனதாக கூறப்படுகிறது. இதுவரை டிக்கெட் முன்பதிவின் மூலம் ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.3.86 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘ஜனநாயகன்’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், முதல் நாள் வசூலில் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படத்தின் ரூ.151 கோடி வசூலையும், விஜய்யின் முந்தைய படமான ‘லியோ’ திரைப்படத்தின் ரூ.149 கோடி வசூலையும் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.