சினிமா செய்திகள்

திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை

மத்திய அரசின் புதிய ஆன்லைன் முறையால், 22 நாட்களில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், விதிமுறைப்படி 48 நாட்கள் கால அவகாசம் இருந்தாலும், மத்திய அரசின் புதிய ஆன்லைன் முறையினால் திரைப்படங்களுக்குச் சான்றிதழ் வழங்கும் காலம் பாதியாகக் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 71,963 திரைப்படங்களுக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இவற்றில் U சான்றிதழ் வகை 41,817 படங்களுக்கும், 1,878 படங்களுக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில், மாற்றங்கள் அல்லது வெட்டுகள் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக 2024-25 ஆண்டில் 3,033 படங்களுக்கு மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 3 படங்களுக்கு சான்றிதழ் வழங்க வாரியம் மறுத்துள்ளது. தணிக்கை வாரியத்தின் முடிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 2025இல் 10ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, பொது ஒழுங்கு மற்றும் அறநெறி ஆகியவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் திரைப்படக் காட்சிகள் இருந்தால் மட்டுமே மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.