சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகள் மற்றும் உணர்ச்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ‘கருப்பு’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் ‘கருப்பு’ திரைப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கண்ணுகளா... செல்லங்களா... சாமிகளா... என் சாமிகளா... முதல்ல இந்த அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி. மே 14-ம் தேதி படத்தை ரிலீஸ் பண்ண முடியல, என்ன பண்றதுன்னே தெரியல... ரொம்ப இக்கட்டான சூழ்நிலை ஆனா, நீங்க எல்லா திசையில இருந்தும் அனுப்புன ட்வீட்ஸ், வாய்ஸ் மெசேஜஸ், போன் கால்ஸ் எல்லாமே எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்துச்சு.
அன்னைக்கு நைட்டே எல்லாத்தையும் புரட்டி போட்டுடலாம்னு தோணுச்சு. நீங்கதான் எல்லாத்தையுமே மாத்துனீங்க
இந்த அன்புக்கு என்ன வார்த்தை சொல்றதுன்னு தெரியல. 'கருப்பு' படத்திற்கு நீங்க கொடுத்திருக்கிற இந்த மரியாதைக்கும், வரவேற்புக்கும் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது. என் அன்பான ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ். 'கருப்பு' படத்தை இவ்வளவு ஸ்பெஷலா மாத்துனது நீங்கதான் என்று தெரிவித்துள்ளார்.