கொச்சி,
மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பார்வதி திருவோத்து, மலையாள திரைப்பட கலைஞர்களின் சங்கமான 'அம்மா' அமைப்பில் மீண்டும் இணையப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
'பூ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி திருவோத்து. இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், மலையாளத்தில் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களைத் தேர்வு செய்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
நடிகையாக மட்டுமல்லாமல், திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்தும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்களின் சங்கமான 'அம்மா' அமைப்பு பேசியுள்ளார்.
அதாவது, 'அம்மா' அமைப்பு தற்போது முன்பைப் போல தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என பார்வதி கருத்து தெரிவித்துள்ளார். அனைவரையும் பாதுகாக்கும் ஒரு பெரிய குடும்பம் அல்லது பாதுகாப்பான அமைப்பு என்ற எண்ணம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது நடைமுறையில் நிரூபிக்கப்படவில்லை. நீண்ட காலமாக பொறுப்பில் இருந்தவர்களின் அனுபவத்துடன் புதிதாக பொறுப்பேற்றவர்களை ஒப்பிட்டு, சில மாதங்களிலேயே அவர்களின் திறமையை கேள்வி எழுப்புவது சரியா என்று பார்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
'அம்மா' அமைப்பு தனக்கு பாதுகாப்பு, ஆதரவு மற்றும் மரியாதையை அனைவருக்கும் வழங்கும் இடமாகத் தெரியவில்லை. எந்த அமைப்பும் இல்லாமலேயே நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். எனவே, தற்போது எனக்கு எந்த அமைப்பிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என அவர் கூறியுள்ளார்.
அமைப்புகள் தொடர்பான விவாதங்களில் இருந்து விலகி, தற்போது தனது திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தப் போவதாக பார்வதி தெரிவித்துள்ளார். தற்போது இவர் “பிரதம திருஷ்டிய குட்டக்கார்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.