சென்னை,
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘தி ஒடிசி’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரை அதிக வசூல் செய்த R-Rated திரைப்படமாக இருந்த ‘டெட்பூல் & வுல்வரின்’ படத்தின் சாதனையை ‘தி ஒடிசி’ முறியடித்துள்ளது.
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 17-ந் தேதி வெளியான திரைப்படம் 'தி ஒடிஸி. கிரேக்க இலக்கியத்தின் புகழ்பெற்ற காவியமான 'ஒடிசி'யை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், டிரோஜன் போரில் பங்கேற்ற மன்னன் ஒடிசியஸ் தனது நாட்டுக்கு திரும்பும் பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களை கதைக்களமாக கொண்டுள்ளது.
சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான 'தி ஒடிஸி' படம், உலகளவில் சுமார் 1.34 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டியுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.12,000 கோடிக்கும் மேல் ஆகும். இதன் மூலம் 2024-ம் ஆண்டு வெளியான ‘டெட்பூல் & வுல்வரின்’ படத்தின் 1.33 பில்லியன் டாலர் வசூலை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, இதுவரை உலகளவில் வெளியான R-Rated படங்களில் அதிக வசூல் செய்திருந்த ‘டெட்பூல் & வுல்வரின்’ படத்தின் வசூலை முறியடித்து புதிய சாதனையை 'தி ஒடிஸி' படம் படைத்துள்ளது.
‘தி ஒடிசி’ திரைப்படம் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் உருவெடுத்துள்ளது. தற்போது உலகளவில் 2026-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தி ஒடிசி’ திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், அதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: R-Rated என்பது அமெரிக்க திரைப்பட மதிப்பீட்டு முறையில், 17 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர் (அ) வயது வந்தவருடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் ஆகும்.