மும்பை,
நடிகையும் பிரபல நடனக் கலைஞருமான நோரா பதேஹி, தனது அறிமுக படத்தின் படப்பிடிப்பின்போது, சக நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.
'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ' நிகழ்ச்சியில் பேசிய நோரா பதேஹி, படப்பிடிப்பின் போது நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது அறிமுக படத்தின் படப்பிடிப்பின்போது, சக நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் நான் கோபமடைந்து அவரை அறைந்தேன். அவரும் பதிலுக்கு என்னை அறைந்தார். அதன்பிறகு மீண்டும் நான் அவரை அறைந்தேன். பின்னர் அவர் என் தலைமுடியை இழுக்க, நானும் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்தேன். இதனால் படப்பிடிப்பு தளத்திலேயே பெரிய கைகலப்பு ஏற்பட்டது. இறுதியில் இயக்குநர் தலையிட்டு எங்களைப் பிரித்தார்" என்று அந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
நோரா பதேஹி பாலிவுட்டில் 'ரோர்: டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பன்ஸ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கமல் சதானா எழுதி இயக்கிய இந்த திரில்லர் திரைப்படம், 2014-ம் ஆண்டு அக்டோபர் 31-அன்று வெளியானது.
இந்திய திரையுலகில் பல மொழி திரைப்படங்களின் பாடல்களில் தனது நடனத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நோரா பதேஹி, தற்போது தமிழ் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'காஞ்சனா 4' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.