சினிமா செய்திகள்

நீட் விவகாரம் - மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் பாலிவுட்... குரல் கொடுத்த நோரா பதேஹி

நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று நோரா பதேஹி கூறியுள்ளார்.

மும்பை,

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு ஆதரவாக பிரபல பாலிவுட் நடிகை நோரா பதேஹி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஆதரவாக நிற்க வேண்டும்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்களுக்கு நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். இரவு பகலாக உழைத்து படிக்கும் ஒவ்வொரு மாணவரும், தனது குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்திற்காக தியாகம் செய்யும் ஒவ்வொரு பெற்றோரும், பொருளாதார சிரமங்களையும் மீறி கல்வி அளிக்கும் ஒவ்வொரு குடும்பமும் நீதியை பெற தகுதியானவர்கள்.

இது அரசியல் பற்றிய விஷயம் அல்ல, மனிதநேயம் பற்றியது. ஒவ்வொரு இளைஞரும் தங்கள் உழைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. கருத்து வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் மாணவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்" என்று நோரா பதேஹி தெரிவித்துள்ளார்.

ஆதரவு

இதன்மூலம், நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த சல்மான் கான், ஆலியா பட், கரீனா கபூர் கான், சோனாக்சி சின்ஹா, சாரா அலி கான், வருண் தவான் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் பிரபலங்களின் வரிசையில் நடிகை நோரா பதேஹியும் இணைந்துள்ளார்.