சென்னை,
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிலா விமல், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் “வெற்றிவேல், கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, போர் தொழில்“ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பால் பாராட்டுகளை பெற்றார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நிகிலா விமலிடம், 'உங்கள் மனதில் யாராவது இருக்கிறாரா? யாரை காதலிக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நிகிலா பதிலளிக்கையில், “என் மனதில் இருப்பது ரசிகர்கள் மட்டும்தான். அவர்கள் தான் என் மனதில் நிறைந்திருக்கிறார்கள். இப்போதைக்கு காதல் குறித்து நான் யோசிக்கவில்லை” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “திருமணம் பற்றியும் தற்போது எந்தத் திட்டமும் இல்லை. அந்த எண்ணம் வரும்போது பார்க்கலாம். காதலோ, திருமணமோ பெரிய விஷயம் அல்ல. ஆனால் இப்போது என் சிந்தனையும், செயலும் முழுவதுமாக சினிமாவைச் சுற்றித்தான் இருக்கிறது” என்றார். நிகிலா விமலின் இந்த வெளிப்படையான பதில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.