சென்னை,
`எமன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ஷில்பா மஞ்சுநாத். `காளி' படத்தில் கிராமத்துப் பெண்ணாக வந்தவர், அடுத்து வெளியான `இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படத்தில் நவநாகரிகப் பெண்ணாக நடித்திருந்தார். அதில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக அவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது.
கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான `சிங்கப்பெண்ணே' படத்தில் அவரது நடிப்பு ரசிக்கப்பட்டது. இந்நிலையில், இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவள் என்றபோதிலும், தமிழ் சினிமா தன்னை கொண்டாடியதாக ஷில்பா மஞ்சுநாத் கூறினார் அவர் கூறுகையில்,
''நான் கர்நாடகாவைச் சேர்ந்தவள் என்றபோதிலும், எனக்கு வாய்ப்பு தந்து அழகுபார்த்த இந்த மண்ணுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழ் தெரியாது. இதனால் மிகவும் சிரமப்பட்டேன். எனக்கு சினிமா பின்புலம் கிடையாது. திடீரென சினிமாவுக்கு வந்தபோது, ஏராளமான விமர்சனங்கள் வந்தது.
ஆனாலும் ஒருகட்டத்தில் நம்பிக்கையும், உழைப்பும் என்னை மாற்றியது. அதனை இந்த தமிழ் சினிமா மதித்தது. ரசிகர்களும் மதித்தார்கள். நான் இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவள் என்றாலும், என் திறமையை கொண்டாடினார்கள். தமிழ் சினிமாவில் மட்டும் தான் பேதங்களையும் கடந்து திறமைக்கு மதிப்பு தருகிறார்கள்'' என்றார்.