சினிமா செய்திகள்

ஆஷா போஸ்லே மறைவுக்கு பாகிஸ்தான் கலைஞர்கள் புகழஞ்சலி

அவரது குரல் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது அகில உலகிற்கும் கிடைத்த பொக்கிஷம் என பாகிஸ்தானிய பாடகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மறைந்த புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லேயின் மறைவுக்கு, எல்லை தாண்டி பாகிஸ்தான் நாட்டு சினிமா கலைஞர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல, ஒட்டுமொத்த இசை உலகிற்கே நேர்ந்த பேரிழப்பு. அவரைப்போல இனி ஒரு நபர் பிறக்கப்போவது இல்லை. சிங்கப்பூரில் இருந்தபோது அவர் எனக்கு போன் செய்து விளையாட்டாக பேசிய நினைவுகள் இப்போதும் பசுமையாக உள்ளன. பாகிஸ்தானிலும் அவரை நேசிப்பவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் பாடகர் அலி ஜாபர் கூறுகையில், "ஆஷா போஸ்லே ஒரு ஈடு இணையற்ற கலைஞர். அவரது பன்முகத்தன்மை கொண்ட குரல் இனி வரும் தலைமுறைக்கும் உத்வேகமாக அமையும். இதுபோன்ற குரல்கள் காலத்தால் அழியாது" என தெரிவித்துள்ளார்.

இதேபோல், பாகிஸ்தான் நடிகை ரீமா கான், ''ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. துள்ளல் இசை முதல் ஆன்மாவை தொடும் கஜல் பாடல்கள் வரை அனைத்திலும் ஆஷா போஸ்லே முத்திரை பதித்தவர்" எனப் புகழ்ந்துள்ளார்.

பாகிஸ்தான் வானொலி தொகுப்பாளர் அனுஷே அஷ்ரப் கூறுகையில், "எல்லைகளில் நிலவும் அரசியல் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு, ஆஷா போஸ்லேயின் குரல் இரு நாட்டு வீடுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. நல்ல இசைக்கு விசா தேவையில்லை என்பதற்கு அவரே சாட்சி" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அவரது குரல் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அது அகில உலகிற்கும் கிடைத்த பொக்கிஷம் என பாகிஸ்தானிய பாடகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.