தெலுங்கானாவில் .சந்திரசேகரராவ் முதலமைச்சராக இருந்த சமயத்தில் சிங்கிள் திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது. சிங்கிள் திரையரங்குகள் தங்களுக்கு நிதி சிக்கல் ஏற்படுவதாக அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தின. இதையடுத்து 2021ம் ஆண்டு பார்க்கிங் வசூலிக்க அனுமதித்து அரசாங்கம் ஒரு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில் ஒரு திரையரங்கில் ரூ.20 பார்க்கிங் கட்டணம் வாங்கியதாக பிரேம் ராமாவத் என்பவர் தெலுங்கானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் கோபால் வாதிடுகையில், 2019-ம் ஆண்டின் தெலங்கானா நகராட்சிகள் சட்டத்தின்படி, வணிக நிறுவனங்கள் தங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குப் போதிய வாகன நிறுத்துமிடத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்பது கட்டாயம் என்று சுட்டிக்காட்டினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி , சினிமா டிக்கெட் வாங்கிய ஒரு ரசிகரிடம் தனியாகப் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளுக்கும் பொருந்தும் என்றும், இதனை உடனடியாக அமல்படுத்த அனைத்து நகராட்சி அமைப்புகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.