ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள ‘ஈரம் காயாத கதைகள்’ புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அமீர் பேசிய போது “என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை என்னுடைய சினிமா ஆர்வத்துக்கு அவர்கள் ஆதரவு தரவில்லை என்றாலும், தொந்தரவு செய்யாமல் இருந்தார்கள். மேலும் அவர்கள் யாருமே எந்த நடிகரை பார்க்க வேண்டும் என்று இதுவரை கேட்டதே இல்லை. ஆனால் இரண்டு விஷயங்கள் நடக்காமல் போனதில் வருத்தம் உண்டு. சைப்ரஸ் விழாவில் ‘ராம்’ படத்துக்காக நான் விருது வாங்கினேன். வழக்கமாக இப்படி விருது வாங்கும் போது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன் என சொல்லி அவர்களிடம் கொடுப்பார்கள். ஆனால் அந்த சூழல் எனக்கு அமையவில்லை.
அடுத்து ‘பருத்திவீரன்’ படம் எடுத்துக் கொண்டிருந்தேன். எப்படியும் அந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என நம்பினேன். அப்போது அதை பெற என் அம்மாவை அழைத்து போக வேண்டும் என இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அன்றைய காலகட்ட அரசியலால் எனக்கு விருது கிடைக்கவில்லை. அதனால் என் அம்மாவை விருது வாங்க வைக்கும் ஆசை நிறைவேறாமல் போனது.
இரண்டாவது விஷயம் என் மனைவி இதுவரை எந்த நடிகரையும் பார்க்க வேண்டும் எனக் கேட்டதே இல்லை. அவர் கேட்ட ஒரே விஷயம் நடிகர் சிவக்குமாரை பார்க்க வேண்டும் என்பதுதான். எனக்கு மிகவும் நெருக்கமான உறவு அவர். ‘பருத்திவீரன்’ படம் நடந்து கொண்டிருக்கிறது. சரி படம் முடிந்த பின்னர் அழைத்து செல்லலாம் என நினைத்து காத்திருந்தேன். ஆனால் படம் முடிந்த பிறகு நடந்த சம்பவம் எல்லாம் அனைவருக்கும் தெரியுமே. இன்று வரை சிவக்குமார் சாரிடமும் என் மனைவி அவரை சந்திக்க விரும்பினார் என்பதையும் சொல்லவே இல்லை. எனவே இந்த விஷயமும் நடக்காமல் போய்விட்டது” என்றார்.
‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் கார்த்தி, சரவணன், கஞ்சா கருப்பு, பிரியாமணி, குட்டிச் சாக்கு, பொன்வண்ணன், சமுத்திரக்கனி என அனைவரும் நடிப்பில் முத்திரை பதித்தனர்.