சினிமா செய்திகள்

ஓடிடியில் புதிய பயணம் தொடங்கும் 'பெத்தி'.. உணர்ச்சிப்பூர்வ பதிவு வெளியிட்ட இயக்குநர்

பெத்தி படத்தின் ஓடிடி வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் புச்சி பாபு சானா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராம் சரண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பெத்தி' (Peddi) திரைப்படம் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த நிலையில், தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இந்த வெளியீட்டை முன்னிட்டு படத்தின் இயக்குநர் புச்சி பாபு சானா ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'பெத்தி' திரைப்படத்தைப் பார்த்து, கொண்டாடி, எங்களுக்கு துணையாக நின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு கனவாகத் தொடங்கிய இந்தப் பயணம், எங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத பயணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ரசிகர்களின் அன்பு, பாராட்டு மற்றும் தளராத ஆதரவால்தான் 'பெத்தி' இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "எங்கள் படக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் இந்தப் படத்தை உருவாக்கினர். அது லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்ததைப் பார்ப்பதே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதியாகும். ஓடிடி-யில் வெளியாகும் நாள் வரை ரசிகர்கள் திரையரங்குகளை நிரப்பி படத்தை கொண்டாடியதே அவர்களின் பேரன்பை வெளிப்படுத்துகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, "இப்போது நெட்பிளிக்ஸ்-இல் 'பெத்தி' தனது அடுத்த பயணத்தைத் தொடங்குகிறது. உலகம் முழுவதும் இன்னும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் படம் சென்றடையும் என்று நம்புகிறோம். திரையரங்குகளில் கிடைத்த அதே வரவேற்பை ஓடிடி-யிலும் புதிய ரசிகர்களிடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 'பெத்தி'யின் வெற்றி எங்களுடையது மட்டுமல்ல, அனைவருக்கும் சொந்தமானது" என்று புச்சி பாபு சானா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.