ராஜமவுலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு வாரணாசி என டைட்டில் அறிவிக்கபட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக டீசரில் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா, கும்பா என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றது.
டீசர் வெளியீட்டு நிகழ்வில் எஸ். எஸ். ராஜமவுலி பேசியது சர்ச்சையையும் கவனத்தையும் பெற்றுள்ளது. படத்தின் பெயர் டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமவுலி , எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என்
என் அப்பா அனுமன் நமக்கு பின்னால் இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றார். அவர் இப்படித்தான் கவனித்துக்கொள்கிறாரா - இதை நினைத்து எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மீது அன்பு உண்டு. அவர் ஒரு நண்பரைப் போல அவருடன் உரையாடுகிறார். எனக்கும் அவர் மீது கோபம் வருகிறது. என் அப்பா அனுமனைப் பற்றிப் பேசி, படத்தின் வெற்றிக்கு அனுமனின் ஆசீர்வாதங்களை நம்பியிருக்கச் சொன்னபோது, எனக்கு மிகவும் கோபம் வந்தது என்றார்.
கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர், தன் படத்துக்கு வாரணாசி என்று தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தியது ஏன்? என்று கேள்வி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மகாபாரதம் எனது கனவுப் படம். இந்த படத்திற்காக இராமாயண எபிசோடை எடுக்கும் அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன் என்று கூறிய ராஜமவுலி கடவுள் குறித்து பேசியது விவாத்த்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ராஜமவுலி இந்துக் கடவுளான அனுமனை அவமதித்து விட்டதாக ஐதராபாத்திலுள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரணை நடைபெறுமா இல்லை ராஜமவுலி இதுகுறித்து விளக்கமளிப்பாரா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.